search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் வாகன சட்ட திருத்தம்"

    மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 71 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தேனி:

    மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 71 பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கம்போல் வாகனங்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சுங்கச்சாவடி வரி வசூலை கைவிட வேண்டும். வாகன காப்பீட்டு தவணை தொகை பல மடங்கு உயர்த்தியதை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி தேனி மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்த போதிலும், பஸ்கள், ஆட்டோக்கள் நேற்று வழக்கம் போல் ஓடின. மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சுமார் 350 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 97 சதவீதம் பஸ்கள் நேற்று இயங்கின. அதேபோல் மாவட்டம் முழுவதும் 90 சதவீதம் ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின.

    பஸ், ஆட்டோக்கள் போக்குவரத்து போதிய அளவில் இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. வேலை நிறுத்தம் அறிவிப்பு காரணமாக மக்கள் பலரும் வெளியூர் செல்லும் திட்டத்தை கைவிட்டு இருந்தது தெரியவருகிறது. இதனால், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. பஸ்களிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து பணிமனைகள் மற்றும் பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    தேனியில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., ஏ.ஐ.யு.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஊர்வலம் மற்றும் சாலை மறியல் நடந்தது.

    இதற்காக தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் பூதிப்புரம் விலக்கில் இருந்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக வந்தனர். இவர்கள், தேனி-மதுரை சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர். அவர்களை நேரு சிலை சிக்னல் அருகில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

    இந்த மறியல் போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ரவிமுருகன், ஏ.ஐ.யு.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர். மறியலின் போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

    மறியல் செய்த நிர்வாகிகள் உள்பட மொத்தம் 71 பேரை தேனி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    அதேபோல், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் நிலையத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னதாக அவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலக சாலையில் உள்ள வாகன புகை பரிசோதனை நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையம் வந்தனர். 
    மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தைக் கண்டித்து மோட்டார் வாகன தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கேரளாவில் பஸ், ஆட்டோக்கள் இயங்கவில்லை. #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill
    திருவனந்தபுரம்:

    மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் மோட்டார் வாகன தொழில் முழுமையாக கார்ப்பரேட் நிறுவனங்கள் வசம் சென்று விடும் என்று தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே இந்த சட்ட திருத்தத்தை கைவிடக்கோரி இன்று போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. பஸ், டாக்சி, ஆட்டோ போன்ற வாகனங்கள் இன்று இயங்காது என்று அறிவித்திருந்தனர்.

    அதன்படி, இன்று இந்த போராட்டம் நடைபெற்றது. கேரளாவிலும் இந்த போராட்டம் காரணமாக பஸ், டாக்சி, ஆட்டோ, வேன்கள் இயங்கவில்லை. அரசு பஸ்களும் ஓடாததால் அவை டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    கேரளாவில் அதிகளவில் ஆட்டோக்கள் உள்ளன. பஸ்களில் அதிக கூட்டம் காரணமாக பலரும் ஆட்டோக்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். சரியான கட்டணத்தை ஆட்டோக்கள் வசூலிப்பதால் எப்போதும் சாலைகளில் ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வண்ணம் இருக்கும்.

    இன்று போராட்டம் காரணமாக ஆட்டோ சேவை முழுமையாக முடங்கியது. இதனால் ஆட்டோக்களை நம்பி பயணம் செய்ய வந்தவர்கள் கடும் பாதிப்படைந்தனர்.

    திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையம் பஸ்கள் எதுவுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த போராட்டம் பற்றி தெரியாத பொதுமக்கள் பஸ்சுக்காக இங்கு வந்து விட்டு ஏமாற்றமடைந்தனர்.

    பஸ்கள் ஓடாததால் அவர்கள் ரெயில் மூலம் அலுவலகம் மற்றும் தங்கள் அவசர பணிகளுக்காக பயணம் மேற்கொண்டனர். இதனால் தம்பானூர் ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரெயில்களில் கூட்ட நெரிசலும் அதிகமாக இருந்தது.

    கேரளாவில் இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த போராட்டம் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கேரளாவின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் வாகன ரோந்தும் நடைபெற்றது.

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் கேரள எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பல்வேறு பணிகள் காரணமாக கேரள சென்ற குமரி மாவட்ட பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill

    ×